புதிய கல்விக் கொள்கைதான் இனி - பிரதமர் மோடி கூறியது என்ன?
நவீன இந்தியாவின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
மத்திய பிரதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களிடையே பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பேசினார். அவர் பேசியதாவது:-
மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை இக்கொள்கை இலக்காக கொண்டுள்ளது. நவீன இந்தியா மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளை கருத்தில் கொண்டு இக்கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது .புதிய தேசிய கல்விக் கொள்கையை உறுதியாக அமல்படுத்துவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் .
மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் பெருமளவிலான ஆசிரியர்கள் நியமனங்கள், இதை நோக்கிய பெரிய நடவடிக்கை . 22,400 இளைஞர்கள் இன்று ஆசிரியர்களாக நியமனம் பெறுகிறார்கள் .அவர்களில் பாதி பேர் பழங்குடியினர் பகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள் .ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் கல்வியை இன்றைய தலைமுறையிடம் மட்டுமின்றி வருங்கால தலைமுறையிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் .
நன்கு கற்பித்து மாணவர்கள் மனதில் தாயைப்போல் இடம் பிடியுங்கள். வேலை வாய்ப்புகளையும் சுய வேலை வாய்ப்புகளையும் ஊக்குவிக்க திறன் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக நாடு முழுவதும் திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன .இவ்வாறு அவர் பேசினார்.