வளரும் நாடுகளுக்காக இந்தியா எப்போதும் பேசுகிறது - ஜெய்சங்கர் பெருமிதம்
வளரும் நாடுகளுக்காக இந்தியா எப்போதும் பேசுகிறது என வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்
By : Karthiga
ஐ.நா பொதுச் சபை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி, ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் நேற்று முன்தினம் அவர் ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றினார். அத்துடன் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் வெளியுறவு மந்திரிகளையும் அவர் சந்தித்து பேசினார்.மேலும் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெசையும் அவர் சந்தித்தார். இத்துடன் தனது அமெரிக்க பயணத்தின் முதல் பகுதியை நிறைவு செய்து இரண்டாவது பகுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று வாஷிங்டன் பயணம் ஆனார். முன்னதாக இந்திய பத்திரிக்கையாளர்களை நியூயார்க்கில் சந்தித்து பேசினார். அப்போது தனது முதல் பாதி அமெரிக்க பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலகின் தற்போதைய நிலையை இந்த ஐ.நா பொதுச்சபை பிரதிபலிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில் தற்போதைய உலகத்துக்கு இந்தியா மிகவும் முக்கியமானது ஆகும். நாம் ஒரு பாலம்,ஒரு குரல், ஒரு பார்வை ஒரு ஊடகமாக இருக்கிறோம். உலக அளவில் தெற்கின் குரலாக இந்தியா பரவலாக கருதப்படுகிறது. இந்தியா எப்போதும் பல வளரும் நாடுகளுக்காக பேசுகிறது. சர்வதேச மன்றங்களில் அவர்களின் பிரச்சனைகளை அழுத்தமாக முன்னிலைப்படுத்துகிறது. உலக பொருளாதாரத்தில் உணவு மற்றும் எரிபொருளின் விலை உரங்கள் பற்றிய கவலை ,கடன் நிலைமை ஆகியவை தற்போது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது பல நாடுகளுக்கு ஆழ்ந்த கவலைகளை கொடுத்துள்ளது.
இந்த பிரச்சனைகள் செவி சாய்க்கப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.இந்த உணர்வுகளை பேசுவது ,இதற்காக குரல் கொடுப்பது இந்தியாதான். கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா பருவநிலை மாற்ற மாநாடு மற்றும் சமீபத்திய பிராந்திய சந்திப்புகளில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து பலரும் என்னிடம் பேசினார். இது நிலப்பரப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகிய இரண்டும் சார்ந்ததாகும் .இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உருவாக்கியது.
அந்த வகையில் இந்த உலகில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதற்கு பிரதமரின் தலைமைத்துவம் அவரது பிம்பம் உலக அரங்கில் அவர் என்ன செய்துள்ளார் என்பதும் தான் காரணம் .இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.