விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்ட முன்னேற்றத்தில் இந்தியா
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் ஆளில்லாத சோதனை ராக்கெட் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
By : Karthiga
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ககன்யான் திட்டமானது பூமியிலிருந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திட்டமாகும். இந்த ககன்யான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின்போது அறிவித்தார்.ககன்யானின் நோக்கம் மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வந்து இந்தியாவின் திறனை நிரூபிப்பது ஆகும்.
ககன்யான் என பெயரிடப்பட்ட இந்திய மண்ணில் இருந்து ஏவப்படும் முதல் மனித விண்வெளி பயணம் ஆனது இந்தியா சுதந்திரம் அடைந்து 75 - வது ஆண்டை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 2022ல் செயல்படுத்த திட்டமிடப்பட்டது . ஆனால் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்த திட்டம் தாமதம் ஆனது. தற்போது 2024 இல் இலக்கை அடைவதற்கான பணிகள் முழு வீட்டில் நடந்து வருகிறது.
ககன்யான் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளைத் தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்த பணிக்காக நான்கு விமானிகள் தேர்வு செய்யப்பட்டனர். பெங்களூர் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. சில உபகரணங்களை வழங்குவதற்காக ரஷ்யா மற்றும் பிரான்ஸ் விண்வெளி நிறுவனங்களுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து விண்வெளி உடைகள், விண்வெளி வீரர்கள் இருக்கைகள் போன்றவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக இரண்டு ஆளில்லாத ராக்கெட் அனுப்பி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில் முதல் சோதனை ராக்கெட் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த சோதனையின் போது ஆபத்து நேரத்தில் விண்வெளி வீரர்கள் தப்பிக்கும் அமைப்புகள் பாராசூட் சிஸ்டம் உட்பட விண்கலத்தின் அமைப்புகளும் சோதனை செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
SOURCE :DAILY THANTHI