ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்தியாவின் 7.7 சதவீத பொருளாதார வளர்ச்சி- பிரதமர் மோடி!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக எட்டியுள்ள நிலையில் இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியா மீது நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
By : Karthiga
குஜராத்தின் காந்திநகரில் உள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரில் 'இன்பினிட்டி மன்றம் 2.0 'என்ற சர்வதேச கருத்தரங்கு நடந்தது.நிதி தொழில்நுட்ப துறைக்கான சர்வதேச தளமாக கருதப்படும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தை புதிய யுகத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகளின் உலகளாவிய மையமாக மாற்ற எங்கள் அரசு விரும்புகிறது. இந்தியா இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பின்டெக் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் அதன் மையமாக கிப்ட் சர்வதேச நிதி சேவை மையம் வளர்ந்து வருகிறது. பசுமை கடன்களுக்கான சந்தை வழிமுறையை உருவாக்குவதற்கு அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் யோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 7.7 சதவீத பொருளாதார வளர்ச்சியை இந்தியா சாதித்து இருக்கிறது .இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியா மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சி தானாக நடக்கவில்லை. இது இந்தியாவின் வலுவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களின் பிரதிபலிப்பாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். முன்னதாக யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பிரதிநிதித்துவ பட்டியலில் குஜராத்தின் பாரம்பரிய கர்பா நடனம் இடம்பெற்றத்திற்காக மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
SOURCE :DAILY THANTHI