உலகமே இந்தியாவை முக்கிய தூணாக பார்க்கும் அளவுக்கு உள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி - பிரதமர் மோடி!
உலகமே இந்தியாவை நிலைத்தன்மையின் முக்கியதூணாகவும் பொருளாதார வளர்ச்சி என்ஜினாகவும் நம்பகமான நண்பனாகவும் பார்க்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் 'துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு நேற்று தொடங்கியது' இது மூன்று நாள் மாநாடு ஆகும். பல்வேறு நாடுகளின் அதிபர்கள் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-
வேகமாக மாறிவரும் உலக வரிசையில் இந்தியா உலக நண்பனாக முன்னோக்கி நடைபெற்று வருகிறது. பொதுவான இலக்குகளை நிர்ணயத்து அவற்றை நம்மால் நிறைவேற்ற முடியும் என்று உலகத்துக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறோம். உலக நலன் மீதான இந்தியாவின் உறுதிப்பாடு, அதன் அர்ப்பணிப்பு ,கடின உழைப்பு ஆகியவை இன்று உலகத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றி இருக்கிறது.
இன்று உலகம் இந்தியாவை நிலைத்தன்மையின் முக்கிய தூணாக பார்க்கிறது. நம்பகமான நண்பனாக மக்களை மையப்படுத்திய வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட பங்குதாரராக, உலக நன்மையில் நம்பிக்கை கொண்ட குரலாக, தெற்கு உலகத்தின் குரலாக, உலக பொருளாதார வளர்ச்சி எஞ்சினாக, திறமையான இளைஞர்களை கொண்ட நாடாக பார்க்கிறது. முதல் ஐந்து ஆண்டுகளில் 13 கோடியே 50 லட்சம் பேரை வறுமையில் இருந்து விடுவித்துள்ளோம். மக்களின் சராசரி வருமானம் உயர்ந்துள்ளது.
இதெல்லாம் இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்ல அறிகுறி. சரக்கு போக்குவரத்தை உயர்த்த இந்தியா பணியாற்றி வருகிறது. விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 149 ஆக அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் எண்ணிக்கை இரண்டு மடங்கும் மெட்ரோ ரயில் வசதி மூன்று மடங்கும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார் .
மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நயனை சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே உணவு பூங்காக்களை மேம்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பு, சுகாதாரத் துறையில் முதலீடு ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின .இந்தியாவின் துறைமுக கட்டமைப்பில் பல லட்சம் டாலர் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஒப்புக் கொண்டதாக பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI