ரூபாய் 15 கோடி செலுத்தும் வரை நடிகர் விஷாலின் படங்களை வெளியிட இடைக்கால தடை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
ரூபாய் 15 கோடியை நிரந்தர வைப்பதாக செலுத்தும் வரை நடிகர் விஷாலின் பட நிறுவனம் தயாரிக்கும் அல்லது நிதி உதவி செய்யும் எந்த ஒரு புதிய படங்களையும் வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
By : Karthiga
நடிகர் விஷால் என்ற விஷால் கிருஷ்ணா ரெட்டி தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் பட தயாரிப்புக்காக சினிமா பைனான்சியர் அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 21.29 கோடியை கடனாக பெற்றிருந்தார் .இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு அன்புச் செழியனுக்கு செலுத்தியது. இது தொடர்பாக விஷாலும் லைகா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுவதுமாக திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு வழங்க வேண்டிய ரூபாய் 21.29 கோடியே வழங்காமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும் அதன் சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி உரிமையை விற்கவும் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி லைகா நிறுவனம் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் விசாரித்த நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ரூபாய் 15 கோடியை நடிகர் விஷால் ஹைகோர்ட் தலைமை பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை ஹைகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் .இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி ரூபாய் 15 கோடியை சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் பெயரில் நிரந்தர வைப்பீடாக செலுத்தும் வரை நடிகர் விஷாலின் பட நிறுவனம் தயாரிக்கும் அல்லது நிதி உதவி செய்யும் எந்த புதிய படங்களையும் வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.