மனக்கவலைகளை நீக்கும் கல்யாண பசுபதீஸ்வரர்!
கரூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது .காமதேனு வழிபட்டதால் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் ஒரு சுயம்புலிங்கம் ஆகும்.
By : Karthiga
கல்யாண பசுபதி ஈஸ்வரர் ஆலயம் சுமார் 2:30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது. முன்கோபுரம் 120 அடி உயரம் கொண்டுள்ளது. கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோவில் காலை 6 மணி முதல் 12 30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணிவரையிலும் நடை திறந்திருக்கும். தலவிருட்சம் வஞ்சி மரமாகும்.
கல்யாண பசுபதீஸ்வரருக்கு சிவகாமி ஆண்டார் முனிவர் சாமிக்கு சாற்ற பூக்கள் கொண்டு வரும்போது புகழ் சோழர் அரசனுக்கு சொந்தமான பட்டத்து யானை முனிவர் கையில் இருந்த பூக்குடலையை தட்டிவிட்டது .இதனைக் கண்ட அங்கிருந்த எறிபத்த நாயனார் தன் கையில் இருந்த வாளால் பட்டத்தை யானையின் தும்பிக்கையை வெட்டினார். மேலும் யானையுடன் வந்த பாகனையும் அரச வீரர்களையும் யானையும் வெட்டிக் கொன்றார் .இதை அறிந்த புகழ் சோழ அரசர் தனது படையுடன் வந்து நடந்த நிகழ்வை கேட்டு இச்செயலுக்கு காரணமாக அமைந்த தன்னையும் வெட்டி கொன்றுவிடுமாறு எறிபத்த நாயனாரிடம் வேண்டினார்.
அப்போது சிவபெருமான் உமா மகேஸ்வரியுடன் தோன்றி அனைவருக்கும் காட்சி கொடுத்தார். மேலும் இறந்தவர்களையும் உயிர்பித்து அருள் செய்தார். இதேபோல் பிரம்மனுக்கு தன் படைப்பு திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார் .அதன்படி காமதேனும் நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது "புற்று ஒன்றில் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும் அதை வழிபடு" என்று அசரீரி கேட்டது.
அதன்படி காமதேனும் தன் மடியில் இருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது .ஒருநாள் இறைவன் திருடியில் காமதேனுவின் குளம்பு பட்டு விடவே லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனும் மனம் வருந்தியது. இதனைக் கண்ட இறைவன் " நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் உன்னை பசுபதி நாதர் என்ற பெயரால் அழைக்கும் .அத்துடன் நீயும் பிரம்மனை போல் படைப்பு தொழில் செய்வாய்" என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்புத்தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினார்.
இதை அடுத்து இறைவன் படைப்புத்தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது . கல்யாண பசுபதீஜ்வரரை வணங்கினால் மன துயரம் நீங்கும், திருமண வரம், குழந்தைப்பபேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் கல்யாண பசுபதீஸ்வரருக்கு பால் ,தயிர், இளநீர் எண்ணெய் ,அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.