பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை பேச்சு - மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கைது
மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய குற்றச்சாட்டுக்கு ஆளான காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டார்
By : Karthiga
பா.ஜ.க ஆட்சி நடக்கிற மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மந்திரியுமான ராஜா பட்டேரியா அங்குள்ள பவானி நகரில் இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கூட்டம் ஒன்றில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார், மோடி மதம், சாதி மொழியின் பெயரால் பிளவுபடுத்துவார். தலித்துகள், பழங்குடியினர் சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால் மோடியை கொள்வதற்கு தயாராகுங்கள். அவரை வீழ்த்துவதாக கருதி கொள்ளுங்கள் என பேசும் வீடியோ நேற்று முன்தினம் வெளியானது.
இது சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 451, 54 , 56,115, 117 இன் படி மத்திய பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .அதன் தொடர்ச்சியாக ஹட்டா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு போலீஸ் படையினர் சென்று அவரை கைது செய்தனர். நேராக அவரை பவானி நகருக்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ராஜா பட்டேரியா கூறியவற்றுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிற வகையில் காங்கிரஸ் கட்சி ஒதுங்கிக் கொண்டுள்ளது. இது பற்றி அந்த கட்சியின் மாநில தலைவரான கமல்நாத் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அந்த பதிவில் அவர் எனது 45 ஆண்டுகால பொது வாழ்க்கையில் நான் மனசாட்சியுடன் எப்போதுமே சத்தியத்தையும் அகிம்சையும் பின்பற்றி வந்துள்ளேன். இந்த விவகாரத்தில் யாரும் விரல்களை நீட்டி விட முடியாது. சர்ச்சைக்குரிய ஒரு தலைவரின் வீடியோ மாநிலத்தில் வைரலாகியுள்ளது. அதில் ஒரு துளியளவேனும் உண்மை இருக்குமேயானால் அத்தகைய பேச்சுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் என கூறியுள்ளார். பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ அவர் வாழ்த்தியும் உள்ளார்.