சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் 'ஓரியன்' விண்கலம் பூமிக்கு திரும்பியது
சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் 'ஓரியன்' விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது.
By : Karthiga
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதர் அனுப்ப ஆர்டெமிஸ் என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல 'ஓரியன்' என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. சோதனை முயற்சியாக ஆளில்லா 'ஓரியன்' விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில் ராக்கெட்டில் ஏற்பட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த மாதம் 16ஆம் தேதி ஆர்டெமிஸ்-1ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த 'ஓரியன்' விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. ஆறு நாட்கள் பயணத்துக்கு பின் 'ஓரியன்' விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது. சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்த 'ஓரியன்' விண்கலம் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது. பூமியில் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.