ஜி-20 மாநாட்டு அரங்கில் சுவாமி மலையில் தயாரான நடராஜர் சிலை!
டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் அரங்கில் சுவாமி மலையில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
By : Karthiga
ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் ஒன்பது மற்றும் பத்தாம் தேதிகளில் நடைபெறுகிறது. அங்குள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'பாரத்' மண்டபத்தில் இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் முக்கிய அம்சமாக மாநாட்டு அரங்கில் தங்கம், வெள்ளி ,செம்பு உள்ளிட்ட எட்டு உலோகங்களால் செய்யப்பட்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலையில் இருந்து தயாரித்து அனுப்பப்பட்டது ஆகும்.
இந்த தகவலை இந்திரா காந்தி தேசிய கலை மையம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தது. அதன்படி 27 அடி உயரமும் 18 டன் எடையும் கொண்ட நடராஜர் சிலை அஷ்ட தத்துகளால் ஆன மிக உயரமான சிலையாகும். இது தமிழகத்தின் புகழ்பெற்ற சிற்பியான சுவாமி மலையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரால் 7 மாதங்களில் செதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அதில் சோழப் பேரரசு காலத்தில் இருந்தே ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 34 தலைமுறையாக சிலைகள் செய்து வருகின்றனர். பிரபஞ்ச ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் சக்தியின் முக்கிய அடையாளமாக நடராஜரின் இந்த சிலை ஜி - 20 உச்சி மாநாட்டில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது என்றும் இந்திரா காந்தி கலை மையம் கூறியிருந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி நடராஜர் சிலை குறித்து பெருமிதம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் "பாரத் மண்டபத்தில் உள்ள அற்புதமான நடராஜர் சிலை நமது வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை உயிர்ப்பிக்கிறது. உலகமே கூடும்போது இந்தியாவின் பழமையான கலைத்திறன் மற்றும் பாரம்பரியத்துக்கு இது சான்றாக நிற்கும்" என்று கூறியுள்ளார்.
SOURCE :DAILY THANTHI