தேசிய நெடுஞ்சாலைகள் குண்டு குழி இல்லாததாக மாறுவது உறுதி : மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
தேசிய நெடுஞ்சாலைகள் குண்டு குழி இல்லாததாக இந்த ஆண்டு இறுதிக்குள் மாற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
By : Karthiga
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-
இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளை குண்டு குழியில்லாதது ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கான கொள்கை உருவாக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள் உருவாவதை தவிர்க்கும் வகையில் ஒப்பந்ததாரர்களின் செயல் திறன் அடிப்படையில் குறுகிய கால அளவிலும் ஒப்பந்தங்கள் அளிப்பதில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உறுதியாக உள்ளது.
கட்டி, இயக்கி மாற்றம் செய்யும் முறையில் நெடுஞ்சாலைகள் நன்றாக பராமரிக்கப்படுவதால் அந்த முறை விரும்பப்படுகிறது. மழை சேதத்தால் நெடுஞ்சாலைகளில் குண்டு குழிகள் உருவாவதால் அது குறித்து கவனம் செலுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்குவது குறித்து புகார்கள் வருகின்றன. அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி கழிவுகள் போன்றவற்றை சாலை கட்டுமானத்தில் பயன்படுத்துவது தொடர்பாக மற்றொரு தேசிய கொள்கையை உருவாக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கழிவுகள் தற்போது பெரும் பிரச்சனையாக உள்ள சூழலில் இது எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமையும். வரும் 2070 ஆம் ஆண்டு பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற பிரதமர் மோடியின் இலக்கை நினைவாக்கவும் இது உதவும். பிரதமர் மோடி துவங்கியுள்ள தூய்மையை சேவை திட்டத்தின் கீழ் பல்வேறு பசுமை முயற்சிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI