வாழ்வின் நல்வாழ்விற்கு இயற்கை சொல்லும் வழிகள் இவை.!
வாழ்வின் நல்வாழ்விற்கு இயற்கை சொல்லும் வழிகள் இவை.!
By : Kathir Webdesk
வெற்றிக்கு உதவும் நம்பிக்கை கதைகள் இரண்டு இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
"எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை".
நன்கு செழித்திருக்கும் ஓர் ஆப்பிள் மரத்தை கவனியுங்கள். அதில் 200க்கும் அதிகமான பழங்கள் கனிந்திருக்கும். . ஒவ்வொரு பழத்திலும் குறைந்தது 5 விதைகள் இருக்ககூடும். அதை தொகுத்து பார்த்தால் அதீத விதைகள் உங்கள் கரங்களில் குவிந்திருக்கும். நடைமுறையில் வளர்க்க போகும் சொற்ப மரங்களுகாக ஏன் இயற்கை இத்தனை விதைகளை உருவாக்கவேண்டும்? என எப்போதாவது சிந்தித்தது உண்டா நாம்.
இது இயற்கை நமக்கு சொல்லும் பாடம். "எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை". ஒன்றை சாத்தியப்படுத்த வேண்டுமென்றால், ஓர் விருட்சத்தை வளர்க்கவோ, ஓர் வெற்றியை வசப்படுத்தவோ வேண்டுமானால் அதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முயற்சிகள் தேவைபடுகின்றன. இந்த இயற்கை விதியை புரிந்து கொள்கிற பொழுது தோல்விகள் நமக்கு ஏமாற்றம் தருவதில்லை, சருக்கல்கள் நம்மை கவலையுற செய்வதில்லை. சோர்வுகளால் நாம் தேங்கிநிற்கவும் போவதில்லை. வெற்றிக்கான குறுக்குவழி ஏதுமில்லை என்பதை புரிந்து கொள்ளும் வாய்ப்பை இயற்கை நமக்கு எதோவொரு வழியினில் சொல்லிகொண்டேயிருக்கிறது.
முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்!
அவை தரும் நல்லனுபவங்களால் புத்துணர்வு கொள்ளுங்கள்!
கசப்பான அனுபவங்களை கடந்து விடுங்கள் !
இலக்கை எட்ட வேறென்ன மாற்றுவழி இருந்துவிட போகிறது?
______________________________________________________________________________
நீங்கள் சிற்பியானால்.....
இன்றைய வேலைகளை குலைக்கும் வகையில் மழை வருகிறதே என நீங்கள் வானிலை குறித்து புகார் தெரிவிக்கலாம்
அல்லது
அதேபகுதியில் தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் வயல்வெளிகளுக்கு வழி பிறந்ததே என ஆனந்தமும் கொள்ளலாம்.
நம்மிடம் பணம் இல்லை என வருத்தம் கொள்ளலாம்
அல்லது நம்முடைய தற்போதைய நிதிநிலை தேவையற்ற செலவுகளை குறைபதற்கு ஏதுவாகவும், வருங்காலத்தில் சிறப்பான சேமிப்பிற்க்கு உந்துதலாகவும் நம் நிலையிருக்கிறது என ஆறுதல் அடையலாம்.
உடல்நிலை சரியில்லை என நம் முயற்சிகளை ஒத்திபோட காரணம் சொல்லலாம் அல்லது நாம் ஓர் முயற்சியை மேற்கொள்வதற்கு உயிரோடேனும் இருக்கிறோம் என உத்வேகம் கொள்ளல்லாம்.
நம் பெற்றோர்கள் நமக்காக ஏதும் செய்யவில்லை என புகார் சொல்வது சுலபம். எதோவொறு சாதனையை தனித்த அடையாளத்துடன் செய்ய நம்மை பெற்றார்களே என்று நம் பிறப்பை கொண்டாடவது நம் நேர்மறை பார்வையின் உச்சம்
நண்பர்கள் இல்லை என வருத்தம் கொள்வதும்,
நமக்கு ஏற்பட்ட தனிமையால் புதிய உறவுகளை, புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என்ற் தேடுதலை வளர்த்து கொள்வதும் நம் முடிவே.
வீட்டு வேலைகளை செய்யவதற்கும், வீட்டிற்க்காக வேலை செய்வதற்கும் சலிப்பு கொள்ளலாம்.
அல்லது எத்தனையோ கோடி மனிதர்களுக்கு வாய்க்காத உரைவிடம் நமக்கு வாய்த்திருக்கிறது, அதற்காக உழைப்பது நமக்கு வழங்கப்பட்ட ஆசிர்வாதம் என பூரித்து போகலாம்.
நம் முன் கிடக்கும் காலம், எந்த வடிவமும் அற்று ஓர் கல் போல் கிடக்கிறது. அதை வாயில்படிகளாக வடிப்பதும், தெய்வ சிலைகளாக செதுக்குவதும் நம் விருப்பம். நம் பொறுப்பு.