சபரிமலை அருகே புதிய விமான நிலையம் - நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
By : Karthiga
சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருகிறார்கள். எனவே சபரிமலை அருகே பக்தர்களின் வசதி கருதி விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அது நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் சபரிமலை எருமேலி அருகே புதிய விமான நிலையம் அமைக்க மத்திய நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து சபரிமலை அருகே எருமேலி தெற்கு, மணிமலை ஆகிய இடங்களில் 2570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வு பணியை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்ய இருக்கிறது. புதிய விமான நிலையம் 3500 மீட்டர் விமான ஓடு பாதையுடன் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.கேரளாவில் ஏற்கனவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நான் இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. எனவே ஐந்தாவதாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைய உள்ளது.