போலி வீடியோக்களை கட்டுப்படுத்த விரைவில் புதிய விதிமுறைகள் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக இருக்கும் போலி வீடியோக்களை கட்டுப்படுத்த விரைவில் புதிய விதிமுறைகள் விதிக்கப்படும் என்று மத்தியமந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
By : Karthiga
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்களைப் போன்ற போலி வீடியோக்கள் தயாரித்து வெளியிடப்படுகின்றன. பிரபலங்களின் உருவ ஒற்றுமையில் உள்ளவர்களின் உடலில் பிரபலங்களின் தலையைப் பொருத்தி இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா , கத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரை போன்ற போலி வீடியோக்கள் வெளியாகின. பிரதமர் மோடி போன்ற போலி வீடியோவும் வெளியானது.இத்தகைய வீடியோ தயாரிப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். இந்நிலையில் போலி விடியோக்கள் குறித்து சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-
போலி வீடியோ விவகாரம் ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. போலி வீடியோக்களை கண்டறிதல், பரவாமல் தடுத்தல், புகார் கூறும் முறையை வலுப்படுத்துதல் போன்ற தெளிவான செயல்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை சமூக வலைதள நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. பயனாளர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கவும் சம்மதித்துள்ளன. போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும். விதிமுறை வகுப்பு அதற்கான பணிகள் இன்று தொடங்கப்படும். குறுகிய காலத்தில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும்.
ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். அல்லது புதிய விதிமுறைகளோ புதிய சட்டமோ கொண்டு வரப்படும். டிசம்பர் முதல் வாரத்தில் அடுத்த கூட்டம் நடக்கும் என்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கை எடுப்பதாக கூட்டம் இருக்கும். மேலும் புதிய விதிமுறைகளில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :Daily thanthi