தனது பணி தர்மத்திற்கு விரோதம் செய்யும் தமிழக காவல்துறை - அண்ணாமலை கண்டனம்!
By : Sushmitha
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசுவிற்கு சொந்தமான சஹாரா கொரியர் நிறுவனத்தில் தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு ஆணையும் சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்த தகவல்களையும் செய்திகளையும் சேகரிப்பதற்காக சென்ற தனியார் பத்திரிக்கையாளர் செந்தில்குமார் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்குப் பின்னால் திமுக அரசின் செயல்பாடு தான் உள்ளது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாடியதோடு மற்ற எதிர்க்கட்சிகளும் இதில் திமுக மீது குற்றம் சுமத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மற்றுமொரு திடுக்கிடும் தகவலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தில், நேற்றைய தினம், தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியதை, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் திரு.செந்தில் குமாரை, அறையில் அடைத்து வைத்து, திமுகவினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து, அவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தற்போது, 55 வயது பெண்மணி ஒருவரை, திரு.செந்தில் குமார் மீது போலியான புகார் கொடுக்க வைத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட.
காவல்துறை, சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, திமுக கட்சியின் ஒரு பிரிவாக அல்ல. உடனடியாக, திரு.செந்தில் குமார் மீது பதிவு செய்துள்ள பொய்யான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், திரு. செந்தில் குமாரைத் தாக்கிய திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.