பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி! எம் வலிமையை மோடி ஜி'யின் வலிமைக்கு அர்ப்பணிக்க நினைத்தேன் - சரத்குமார் பேச்சு!
By : Sushmitha
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை பாஜக கூட்டணியில் எதிர்கொள்ள உள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமத்துவ மக்கள் கட்சியை அக்கட்சி தலைவர் சரத்குமார் இன்று இணைத்துள்ளார்.
சென்னையில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சில பாஜக நிர்வாகிகளும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அக்கட்சி மற்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், சஞ்சலத்தில் இருந்த நான் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் பொழுதும் பத்திரிக்கையாளர்களும் சரி இயக்கத்தின் சகோதரர்களும் சரி பிற கட்சிகளும் சரி எத்தனை சீட்டில் நிற்க போகிறீர்கள் யாருடன் கூட்டணி என்று கேட்பார்கள் இது மனதை தாக்கிக் கொண்டிருந்தது. நாம் இப்படி ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கும் பொழுது எத்தனை சீட்டு, எந்த தொகுதி கொடுப்பார்கள் என்பது மட்டும் தான் அரசியலா?
நாம் எடுத்துக் கொண்ட பாதை மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொண்ட அந்த கொள்கை அடிபட்டு வருகிறதே! நாமும் அந்த வழியில் தான் செல்ல வேண்டுமா நம்முடைய வலிமை எல்லாம் ஏன் ஒரு வலிமையான மோடி ஜி அவர்களுக்கு அர்ப்பணித்து அவருடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்பது எனக்கு எழுந்தது! இது குறித்த எண்ணத்தை என் மனைவியிடம் கூறிய பொழுதும் என்ன ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களுடன் உண்மையாக இருப்பேன் என்று கூறினார்.
அவர் கூறிய பிறகு எனக்கு முடிவு உறுதியானது, அதனால் இரவு இரண்டு மணி என்று கூட பார்க்காமல் அண்ணாமலை அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்த தகவலை தெரிவித்து சாத்தியமா என்று கேட்டேன் அவரும் சாத்தியம் என்று கூறினார். அதற்குப் பிறகு என் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து தற்போது ஒருமனதாக பெரும்பான்மையுடன் நாங்கள் பாஜகவுடன் இணைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
Source : Junior Vikatan