"பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி"... பிரதமரின் பரிணாமங்களை கொண்ட புத்தகம்! அண்ணாமலை வெளியீடு.
By : Sushmitha
குடியரசுத் தலைவரின் பத்திரிக்கை செயலாளர் அஜய் சிங் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலை தி இந்து குழுமத்தின் தமிழ் திசை பதிப்பகம் தமிழில் மொழிபெயர்த்து சென்னை எம்ஜிஆர் - ஜானகி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அறிமுகப்படுத்தியது. அதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்நூலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை,.நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, 1995 ஆம் ஆண்டிலிருந்து, 2022 ஆம் ஆண்டு வரை, சுமார் 27 ஆண்டுகள் நெருக்கமாகக் கவனித்த மூத்த ஊடகவியலாளர் அஜய் சிங் அவர்கள், வெளி உலகிற்குத் தெரியாத நமது பிரதமர் அவர்களின் மற்றுமொரு பரிமாணத்தை இந்த நூலின் வழியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்றால் மிகையாகாது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலை, அதன் தாக்கம் சற்றும் குறையாமல், அப்படியே ரசிக்கும் வண்ணம் தமிழில் மொழிபெயர்த்துள்ள திரு ரங்காச்சாரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விழாவில் முன்னிலை வகித்துச் சிறப்பித்த, காமராஜ் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், ஐயா தமிழருவி மணியன் அவர்கள், மூத்த அரசியல் தலைவர் ராதா கிருஷ்ணன் அவர்கள், மணிப்பால் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. சேஷாத்ரி சாரி அவர்கள், இந்து தமிழ் திசை பத்திரிகை இயக்குனர் திருமதி. விஜயா அருண் அவர்கள், விழாவுக்குத் தலைமையேற்ற இந்து தமிழ் திசை பத்திரிகை ஆசிரியர் திரு கே.அசோகன், பத்திரிக்கையாளர் ஷபி முன்னா அவர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Source : The Hindu Tamil thisai