தாமரைச் சின்னத்திற்கு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!..
By : Sushmitha
பாஜகவிற்கு தாமரை சின்னத்தை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய நாட்டின் தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கி இருப்பது அநீதி என்று பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இதனை அடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் கங்காபுர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ரமேஷ் தரப்பில், தேசிய சின்னமாக தாமரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாநில அரசுகளும் அதனை மாநில சின்னமாக அறிவித்துள்ளனர் அது மட்டுமின்றி தாமரை ஒரு மத சின்னம் எனப்படுகிற நிலையில் பாஜகவிற்கு தாமரை சின்னம் ஒதுக்கியது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்று வாதிட்டார்.
ஆனால் இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதோடு இந்த வழக்கில் மனுதாரர் செலுத்திய 20,000 ரூபாயில் 10 ஆயிரம் ரூபாயை சட்டப்பணிகள் ஆணை குழுவுக்கு செலுத்த வேண்டும் மீதமுள்ள பணத்தை மனுதாரர் திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டுள்ளனர்.
Source : Dinamalar