பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சால் வழக்கில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!!
By : Sushmitha
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது வழக்கில் சிக்கி உள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி இரவு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக வேட்பாளரான கனிமொழி மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனும் பங்கேற்றனர்.
அதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசி விமர்சனம் செய்தார். மேலும் அவர் பேசிய வீடியோ காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் கண்டனங்களை பெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன் மாவட்ட தேர்தல் அலுவலக ஆட்சியரிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகார் மனுவில் இண்டி கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைப்பு அனிதா ராதாகிருஷ்ணன் அருவருக்கத்தக்க இழிவான மற்றும் அசிங்கமான சொற்களை பயன்படுத்தி பிரதமர் மோடியை குறித்து பேசி உள்ளார். இது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படி இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது தேர்தல் விதிமுறைகளின் படி குற்றமாகும்! அதனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த புகாரை அடிப்படையாக வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : The Hindu Tamil thisai