செய்யாறு அருகே அரசு பள்ளி சிமெண்ட் காரை இடிந்து மாணவர்கள் படுகாயம்..! அவசரகதியில் கட்டப்பட்ட கட்டிடம்..மக்கள் குற்றச்சாட்டு..!.
By : Sushmitha
ஆறு மாதத்திற்கு முன்பு கட்டிய புதிய ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து பள்ளி மாணவர்களின் தலையில் விழுந்து உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள அத்தி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததால் கனிம வளம் திட்டத்தின் கீழ் 17 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இதனை அடுத்து இந்த கட்டிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திடீரென்று பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து பள்ளி மாணவர்களின் தலையில் விழுந்துள்ளது. இதில் ஐந்து மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தரமற்ற முறையிலும் அவசரக் கதியிலுமே பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது, இந்த பள்ளி கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : Puthiyathalaimurai