நாளுக்கு நாள் குழந்தை ராமரை பார்க்க அலைமோதும் மக்கள்..! கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதி தேவஸ்தான குழு ஆலோசனை..!
By : Sushmitha
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்க்கசேஷத்ர அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ராமர் கோவில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழாவுடன் திறக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களின் பயன்பாட்டிற்கு ராமர் கோவில் திறக்கப்பட்ட நாளிலிருந்து உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் குழந்தை ராமரை தரிசித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் குழந்தை ராமரை தரிசிக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறதால் அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை குறித்து ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலின் தேவஸ்தான அதிகாரிகளிடம் அயோத்தி ராமர் கோவில் சார்பில் ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ராமர் கோவில் நிர்வாகத்திடம் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு தொடர்பான ஆலோசனை அறிக்கைகளை தேவஸ்தான குழு வழங்கியுள்ளது. அதன்படி பக்தர்களின் கூட்டத்தை நிர்வகிக்கவும், வரிசை முறையை ஒழுங்குபடுத்தவும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருதல் போன்ற ஆலோசனைகளை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : Dinamalar