அறிவிப்பையும் வெளியிட்டு விட்டுப் பிறகு துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? - அண்ணாமலை கேள்வி!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக காவல்துறை அதிகாரிகள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பேருந்துகளின் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கடந்த 2021 - 2022 ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் காவல் அதிகாரி ஒருவர் அரசு பேருந்தில் பயணித்த பொழுது பயண சீட்டு எடுக்கச் சொல்லி நடத்துனருக்கும் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் கட்டணமின்றி தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும், மற்ற நேரங்களில் காவலர்கள் பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டும்.
தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச்சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து கழகம் சார்பில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டது.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 2021 - 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் திரு. ஆறுமுகப்பாண்டி அவர்களை, இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, காவலர் திரு. ஆறுமுகப்பாண்டி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Source : The Commune