சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள்.. பாமர மக்களுக்கு புரியும் வகையில் செய்தி நடை..
![சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள்.. பாமர மக்களுக்கு புரியும் வகையில் செய்தி நடை.. சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள்.. பாமர மக்களுக்கு புரியும் வகையில் செய்தி நடை..](https://kathir.news/h-upload/2024/05/24/1620024-adobeexpress2024052416365301.webp)
சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள்:
இன்று தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 43வது நினைவு நாள். அவரைப் பற்றி இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார்.
பாமர மக்களுக்கு புரியும் வகையில் செய்தி நடை:
தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடை நிறுத்தினார். தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை:
மேலும் அண்ணார் அவர்களின் நினைவு நாளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழை நாம் போற்றி வணங்க வேண்டும் என்று கூறுகிறார். இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது, "தமிழகத்தின் முக்கிய ஊடகங்களில் ஒன்றாக தினத்தந்தி நாளிதழை உருவாக்கியதோடு, சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர். அமைச்சராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் சீரிய மக்கள் பணி மேற்கொண்டவர். தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம்" என்று கூறினார்.
டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி:
மேலும் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "சபாநாயகராக இருந்து சபையில் தமிழை ஒலிக்கச் செய்த ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள் சகலமானவர்களுக்கும் சமமாக தமிழ் செய்திகளை எளியவருக்கும் எளிய பதிப்பாக சென்றடைய செய்து செய்தியை பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு சரித்திரம் படைத்தவர். எளிய செய்தி ஊடகத்திற்கு நாட்டில் மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர். அவர் வழியில் இன்று செய்தி ஊடகமாக மட்டுமல்லாமல் ஒளி ஊடகமாகவும் அவரது முயற்சி இன்று வெற்றிகரமாக பரிமளித்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. தமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்" என்று கூறினார்.
Input & Image courtesy:News