Kathir News
Begin typing your search above and press return to search.

மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது!...... காங்கிரஸ் திட்டத்தை அம்பலப்படுத்தும் பாஜக தலைவர்கள்!

மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது!...... காங்கிரஸ் திட்டத்தை அம்பலப்படுத்தும் பாஜக தலைவர்கள்!

SushmithaBy : Sushmitha

  |  28 May 2024 3:57 PM GMT

நாடு முழுவதும் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுவது காங்கிரஸ் வெளியிட்ட வாக்குறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு வழங்கப்படும் என்ற வாக்குறுதி! ஆனால் இதனை அமல்படுத்துவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை பறிக்கும் காங்கிரஸ்:

முதலில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்ட போதே மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு எதிர்க்கப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று கூறினார். ஆந்திர பிரதேசத்தில் 2004 இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பொழுதும் எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டது. இதனை முதலில் சோதனை ரீதியில் காங்கிரஸ் அமல் செய்தது. பிறகு அதனையே நாடு முழுவதும் வழங்க விரும்பியது. இப்படி 2004 முதல் 2010 க்கு இடையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் காங்கிரசால் அதனை செய்ய முடியவில்லை.

இருப்பினும் 2011இல் காங்கிரஸ் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சித்தது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்ததோடு அரசியலமைப்பையும் மதிக்கவில்லை என்று கூறினார்.

முஸ்லிம் லீக் போல இருந்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:

இதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பொழுதே முஸ்லிம் லீக் போல இருப்பதாக நான் கூறினேன். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் கிடையாது என்று அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு குழு முடிவெடுத்திருந்தது. ஆனால் அம்பேத்கரின் வார்த்தைகளையே வாக்குக்காக காங்கிரஸ் தற்போது உதாசீனப்படுத்தியுள்ளது என்று இதுவரை நடந்தவற்றை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி காங்கிரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களா! :

சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் கோஷி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த I.N.D.I கூட்டணி தலைவர்கள் நாட்டில் உள்ள பெரும்பான்மையான சமுதாயத்தை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற விரும்புகிறார்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பறிக்க எதிர்க்கட்சிகள் மூன்று பெரிய சதிகளை செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் இது அரசியலமைப்பிற்கு மட்டும் இன்றி அம்பேத்கரின் ஆன்மாவிற்கும் எதிரானது என்று பேசினார்.


இட ஒதுக்கீட்டை என்றும் பாதுகாக்கும் பாஜக:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் ஓ.பி.சி.,யின் இட ஒதுக்கீட்டிற்கு பாஜக என்றும் ஆதரவாக இருந்துள்ளது என்றும் இட ஒதுக்கீட்டை பாஜக தான் எப்பொழுதுமே பாதுகாத்து வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் எதிர்த்தார்:

மேலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதனை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். ஆனால் தற்போது I.N.D.I கூட்டணியில் உள்ள கட்சிகள் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டு வழங்க போட்டி போடுகின்றன என்று கூறினார். அதோடு, 118 முஸ்லிம் சாதிகளை 2010 இல் மேற்கு வங்கத்தில் ஓ.பி.சி பிரிவில் சேர்த்து கடந்த 14 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி.,யின் இட ஒதுக்கீட்டு உரிமைகளை முழுமையாக கொள்ளையடித்துள்ளது, அவர்களின் இந்த நடவடிக்கையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியும் உள்ளது என்று தெரிவித்தார்.

கோலாகல ஸ்ரீ நிவாஸ்:

இந்த நிலையில் பிரத்தியேகமாக கதிர் செய்திகளுக்கு பேட்டி கொடுத்த மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீ நிவாஸ், கடந்த 10 ஆண்டுகளாக இதுகுறித்து பேசாததற்கும் தற்போது பேசுவதற்கும் காரணம் இருக்கிறது ஏனென்றால் காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் சில ஆபத்தான விஷயங்களை வாக்குறுதியாக கொடுத்திருக்கிறது. அதில் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்குவது. ஆனால் இந்திய அரசியலமைப்பின்படி மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொடுக்க முடியாது. இருப்பினும் வாக்கு வங்கி அரசியலுக்காக 2004 - 2010 வரைக்கும் அதற்கான முயற்சிகளை ஆந்திராவை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர் ரெட்டி முன்னின்று செய்தார். ஆனால் அவர்களின் முயற்சிகளை உச்ச நீதிமன்றம் இதுவரை தவிடு பொடி ஆக்கி வந்துள்ளது.


இருப்பினும் அதை மீண்டும் மீண்டும் முயற்சித்து வருகிறார்கள், எதற்காக என்றால்! இஸ்லாமியர்களிடம் உச்ச நீதிமன்றமே செய்ய முடியாது என்று கூறிய இட ஒதுக்கீட்டை உங்களுக்காக செய்து கொடுக்க முயற்சிக்கிறோம் என்பதை காட்டி வாக்கு வங்கியை பெருக்குவதற்காக இதனை செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.


மேலும் 2012 இல் உத்திர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் பொழுது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 27% ஆக உள்ள ஓ.பி.சி.,யின் இட ஒதுக்கீட்டில் நான்கரை சதவீதத்தை முஸ்லிம்களுக்கு உள் இட ஒதுக்கீட்டாக வழங்க முடிவு செய்தது. ஆனால் அது உச்ச நீதிமன்றத்தில் வழக்காக மாறியதை அடுத்து இன்றளவும் அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இவை அனைத்தையும் பிரதமர் மேற்கோள் காட்டி வருகிறார். இப்படி ஆந்திரா மற்றும் உத்திரபிரதேசத்தில் பரிசோதித்தவற்றை நாடு முழுவதும் செயல்படுத்த நினைக்கிறார்கள் என்பதைத்தான் பிரதமர் மோடி தற்போது அம்பலப்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News