ஆகம விதிகளை மீறி இந்து கோவில்களில் சாய்பாபா சிலை அமைக்கப்படுகிறதா?: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..
![ஆகம விதிகளை மீறி இந்து கோவில்களில் சாய்பாபா சிலை அமைக்கப்படுகிறதா?: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.. ஆகம விதிகளை மீறி இந்து கோவில்களில் சாய்பாபா சிலை அமைக்கப்படுகிறதா?: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..](https://kathir.news/h-upload/2024/06/27/1633990-adobeexpress2024062713053701.webp)
இந்து கோயிலில் சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் இதற்கு இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய மனுவில் இது பற்றி கூறும் போது, "தமிழகத்தில் உள்ள சாய்பாபா கோவில்களில், வெள்ளை மார்பிள் கல்லால் ஆன சாய்பாபா சிலை உள்ளது. சாய்பாபா கோவில்களை, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.
சாய்பாபாவின் உண்மையான பெயர் தெரியவில்லை. அவரது மத அடையாளத்தையும் உறுதி செய்ய முடியவில்லை. சீரடியில் சாய்பாபா கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் உள்ள இந்து கோவில்களில், சாய்பாபா சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சாய்பாபா கோவில்களில், நந்தி சிலை உடன் சாய்பாபா சிலையும் நிறுவப்பட்டு உள்ளது. இது, ஆகம விதிகளுக்கு எதிரானது. எனவே சாய்பாபா சிலைக்கு எதிராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தி சிலையை அகற்ற வேண்டும்.
சாய்பாபாவை பின்பற்றுபவர்கள் உள்ளனர். அதற்காக, இந்து ஆகம விதி, நம்பிக்கையை மீற முடியாது. எனவே, இந்து கோவில்களில் எங்கெங்கு சாய்பாபா சிலைகள் நிறுவப்பட்டுள்ளதோ, அவற்றை அகற்ற வேண்டும். எதிர்காலத்திலும், சாய்பாபா சிலையை கோவிலுக்குள் நிறுவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்க, இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்து இருக்கிறது.
Input & Image courtesy: News