Kathir News
Begin typing your search above and press return to search.

சுங்க கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் போலவே ஓ.பி.யு சாதனம் - மத்திய அரசு அறிமுகம்!

பயண தூரத்துக்கு ஏற்ப வாகன சுங்க கட்டணம் வசூல் செய்ய புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.

சுங்க கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் போலவே ஓ.பி.யு சாதனம் - மத்திய அரசு அறிமுகம்!
X

KarthigaBy : Karthiga

  |  13 Sep 2024 10:44 AM GMT

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கம், கிரெடிட் கார்டு ,டெபிட் கார்டு மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதனால் சுங்கச்சாவடிகளில் நேர விரயம் ஏற்பட்டு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவானது. அதைப் போக்க பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது .அதன் பிறகும் விடுமுறை காலங்களில் ஒரே நேரத்தில் வெளியூர் செல்பவர்களால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி வருகின்றன.

எனவே பாஸ்டேக் முறையுடன் செயற்கைக்கோள் அடிப்படையிலான குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற பயண தூர அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும் என்று கடந்த ஜூலை மாதம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது .பெங்களூரு மைசூர் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவிலும் ஹரியானா மாநிலத்தில் பானிபட்-ஹிசார் பிரிவிலும் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது .

இந்நிலையில் இந்த புதிய முறை நாடு முழுவதும் சில நெடுஞ்சாலைகளிலும் விரைவு சாலைகளிலும் நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக 2008 ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாகனங்களில் செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய ஓ.பி.யு கருவி வெளிப்புறத்தில் பொருத்தப்படும் .இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம் சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணிக்கும் போது நாள் ஒன்றுக்கு முதல் 20 கிலோமீட்டர் கட்டணம் கிடையாது.அதன் பிறகு பயணிக்கும் தூரம் செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு 'பாஸ்டேக்' போலவே வங்கி கணக்கில் இருந்து சுங்க கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

ஓ.பி.யு கருவி வாயிலாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளுடன் இணைப்பு ஏற்பட்டு வாகன பயண தூரம் பின் தொடரப்படும் குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளும் செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்படும். நாளடைவில் அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்படும் போது சுங்கச்சாவடிகள் தேவையற்றதாகிவிடும் .அப்போது வாகனங்கள் இடையூறு இன்றி பயணிக்க முடியும். சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி வசிக்கும் மக்கள் தினமும் 20 கிலோமீட்டர் வரை கட்டணம் இன்றி சென்று வர வாய்ப்பு ஏற்படும். பாஸ்டேக் போலவே ஓ.பி.யு சாதனத்தை அரசு இணையதளங்களில் வாங்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News