மோடி அரசின் ஸ்வாமித்வா திட்டம்: உலக அரங்கில் மிளிரும் இந்தியா!

வாஷிங்டன் டிசியில் நடைபெற்று வரும் மதிப்புமிக்க உலக வங்கி நில உரிமை மாநாடு 2025-ல் இந்தியா பங்கேற்று, நில நிர்வாகத்தில் தான் மேற்கொண்டுள்ள உலகளாவிய சிறந்த நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தது. நேற்று நடைபெற்ற ஒரு அமர்வில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் விவேக் பரத்வாஜ் பங்கேற்று, "நில உரிமைகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களில் சிறந்த நடைமுறைகளும் சவால்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நில உரிமைகள், நில உரிமை சீர்திருத்தங்கள், தொழில்நுட்பம் சார்ந்த திட்டமிடல் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றத்தை அவர் விவரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவில் முன்னோடித் திட்டமான ஸ்வாமித்வா திட்டமானது (கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் நிலங்களை ஆய்வு செய்து வரைபடமாக்கி சொத்து உரிமை அட்டை வழங்கும் திட்டம்), கிராமப்புற நில நிர்வாகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக உருவெடுத்துள்ளதை அவர் எடுத்துரைத்தார்.
ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் இந்தியா 68,000 சதுர கிலோமீட்டர் கிராமப்புற நிலத்தை ஆய்வு செய்துள்ளது என்றும், இதன் மூலம் 1.16 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்களை உரியவர்களிடம் வழங்கி அவற்றின் பயன்பாட்டை இந்திய அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக பல லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு சட்டப்பூர்வ நிலஉரிமை, கண்ணியம், நிலத்தின் பேரில் கடன் வாய்ப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இந்த மாநாட்டில், இந்தியாவின் மேம்பட்ட ஜிஐஎஸ் அடிப்படையிலான இடஞ்சார்ந்த திட்டமிடல் தளமான ‘கிராம் மஞ்சித்ரா’ குறித்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அலோக் பிரேம் நாகர் விளக்கி உரையாற்றுவார்.