கானா நாடாளுமன்றத்தில் உரை ஆற்றிய முதல் இந்தியப் பிரதமர்: மோடி பெரும் முக்கிய அங்கீகாரம்!

கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர் அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை இது பிரதிபலித்தது.
பிரதமர் தமது உரையில், சுதந்திரத்திற்கான பகிரப்பட்ட போராட்டங்கள், ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று பிணைப்புகளை எடுத்துரைத்தார். தமக்கு வழங்கப்பட்ட தேசிய விருதிற்காக கானா அதிபர் திரு ஜான் டிராமணி மகாமா மற்றும் கானா மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இது நீடித்த நட்பின் சின்னம் என்று அவர் கூறினார். கானாவின் சிறந்த தலைவர் டாக்டர் குவாமே நக்ருமாவின் பங்களிப்புகளை பிரதமர் எடுத்துரைத்தார். ஒற்றுமை, அமைதி, நீதி ஆகியவற்றின் லட்சியங்களின் வலுவான அடித்தளமாக இருதரப்பு ஒத்துழைப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.
"நம்மை ஒன்றிணைக்கும் சக்திகள் உள்ளார்ந்தவை என்று ஒருமுறை டாக்டர் நக்ருமா கூறியதை பிரதமர் மேற்கோள் காட்டினார். ஜனநாயக அமைப்புகளின் நீண்டகால தாக்கம் குறித்து பேசிய பிரதமர், ஜனநாயக விழுமியங்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். ஜனநாயகத்தின் தாயாக இந்தியா அதன் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜனநாயக நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஜனநாயகத்தின் ஆழமான, துடிப்பான வேர்கள் உள்ளதை எடுத்துரைத்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையும் ஜனநாயக வலிமையும், கானாவின் ஜனநாயகப் பயணத்திலும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், தொற்றுநோய்கள், இணையதள அச்சுறுத்தல்கள் போன்ற உலகளாவிய சவால்களையும் அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய நிர்வாகத்தில் உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தச் சூழலில், இந்தியாவின் G20 தலைமைத்துவ காலத்தில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.