நமது தன்னம்பிக்கை சின்னமாக ஆபரேஷன் சிந்தூர் இருக்கும்: மத்திய அமைச்சர் பெருமிதம்!

By : Bharathi Latha
இந்தியா தனது எதிரிகளை உள்நாட்டு வலிமையுடன் தோற்கடிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் சான்றாகும் என்று மத்திய பாதுகாப்பு த் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் உமாரியாவில் BEML நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும், பிஇஎம்எல் ரயில் ஹப் ஃபார் மேனுஃபேக்ச்சரிங் (BEML Rail Hub for Manufacturing - BRAHMA - பிரஹ்மா) நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டி அவர் பேசினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான, கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு பொருத்தமான பதிலடி என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் தீர்க்கமான பதிலடி அதன் ஒருமைப்பாடு மீதும் இறையாண்மையின் மீதுமான தாக்குதலை இனி இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்ற உரத்த, தெளிவான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தியா பிற நாடுகளை ஆக்கிரமித்து தாக்குவதில்லை எனவும் ஆனால் இந்தியா மீது ஆக்கிரமிப்பு செய்து தாக்குதல் நடத்துபவர்கள் தப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் தன்னம்பிக்கையின் சின்னமாக ஆபரேஷன் சிந்தூரை விவரித்த பாதுகாப்பு அமைச்சர், ஆயுதப்படைகள் உள்நாட்டு உபகரணங்களை திறம்பட பயன்படுத்தியதாகவும், அந்த உபகரணங்கள் இந்த நடவடிக்கையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததாகவும் வலியுறுத்தினார். பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய உறுதியுடன் செயல் படுவதால்தான் இந்தியா இந்த நிலையை அடைய முடிந்தது என்று அவர் கூறினார்.
