கார்களில் ஆறு 'ஏர்பேக்' கட்டாயமாக்கும் திட்டம் இல்லை : நிதின் கட்காரி!
கார்களில் ஆறு ஏர்பேக் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டம் இல்லை என்று நிதின் கட்காரி கூறினார்.
By : Karthiga
கார்கள் விபத்துக்குள்ளாகும் போது முன் இருக்கையில் உள்ள டிரைவரும் மற்றொரு பயனியும் காரின் டாஷ் போர்டில் மோதி பலத்த காயமடைய வாய்ப்புள்ளது . அது போன்ற ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக காரின் முன் இருக்கைகள் பகுதியில் 2 'ஏர் பேக்' பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணம் செய்தவருக்கும் டாஷ் போர்டுக்கும் இடையே ஏர்பேக் தடுப்பாக அமைந்து உயிரை பாதுகாக்கும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்பட்ட கார்களில் இரண்டு ஏர்பேக் பொருத்துவது கட்டாயமாகும். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது.
கார்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 6 'ஏர்பேக்' பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இம்முடிவு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது. இதற்காக மோட்டார் வாகன விதிமுறைகளில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரியிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கார்களில் ஆறு ஏர்பேக் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு விரும்பவில்லை என்று பதில் அளித்தார்.
SOURCE :DAILY THANTHI