தேசிய கல்விக் கொள்கைக்கு எந்த மாநிலமும் எதிர்ப்பு இல்லை : பெற்றோர் மாணவர்களுக்கு அதிக பயன்- மத்திய இணை மந்திரி!
தேசிய கல்விக் கொள்கை குறித்து மத்திய இணை அமைச்சர் கூறியுள்ள செய்தியை பற்றி காண்போம்.

By : Karthiga
மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் தலைமை தாங்கி உள்கட்டமை வசதிகள் அனைத்தையும் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அளவில் இருந்து சர்வதேச அளவுக்கு இயங்கத் தொடங்குகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தை பலரும் தேடி வருவார்கள். இதுவரை 3 ஆயிரம் ஆசிரியர்கள் 17 நாடுகளில் இருந்து வந்து பயிற்சி பெற்று சென்றிருக்கிறார்கள். இது மென்மேலும் ஏறும். வெளிநாடுகளுக்கு நம் மாணவர்கள் சென்று படித்து வந்த காலம் போய் தற்போது வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து படிக்கும் அளவுக்கு இந்தியாவில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.
நடந்து முடிந்த ஜி20 மாநாட்டில் கூட கல்விக் கொள்கை குறித்து பரிந்துரை செய்திருக்கிறோம். தேசிய கல்விக் கொள்கை 2020 நாடு முழுவதும் அமல்படுத்தி இருக்கிறோம். எந்த மாநில அரசும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதில் சில உள்ளீடுகளை கொண்டு வர பரிந்துரைத்து இருந்தார்கள். அதனையும் உள்வாங்கி மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையில் சேகரித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்மை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI
