Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்ரேல் போரை நிறுத்த நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இஸ்ரேல் போரை நிறுத்தினால் பாலஸ்தீனத்திற்கு இரண்டரை கோடி வழங்குவதாக நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல்  போரை நிறுத்த நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

KarthigaBy : Karthiga

  |  20 Oct 2023 10:45 AM GMT

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குவதாக நோபல் பரிசு வென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா யூசுப் அறிவித்து உள்ளார்.இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 2 வாரமாக உக்கிரமாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் பன்னாட்டு படைகளின் உதவியுடன் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.


இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். காசா நகரமே சிதைந்துபோய் பலர் உயிருக்கு போராடி வருகிறார்கள். மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோளையும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் விதிகளை மீறி பாஸ்பரஸ் குண்டுகளை பாலஸ்தீன் மீது வீசியும், மருத்துவமனைகள், தப்பிச் செல்லும் மக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல்களில் படுகாயம் அடைந்த மக்கள் காசாவில் உள்ள அல் அஹ்லி என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கி இருக்கிறது.


இஸ்ரேலின் இந்த செயலுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் செய்யவில்லை என இஸ்ரேல் அரசு மறுத்து உள்ளது. இந்த நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா யூசுப் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு உள்ள பாலஸ்தீன் மக்களுக்காக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளார். பாலஸ்தீன் மக்களுக்கு உதவிகளை செய்து வரும் 3 தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்த தொகையை அவர் வழங்க உள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சி அடைந்தேன். இஸ்ரேல் அரசாங்கம் காசாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்கு 3 தொண்டு நிறுவனங்கள் மூலமாக 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குகிறேன்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


SOURCE :Oneindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News