தங்க நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் மீறினால் ஐந்து மடங்கு அபராதம் - அதிரடி காட்டும் மத்திய அரசு
தங்க நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என இந்திய தர நிர்ணய அமைவனம் அறிவித்துள்ளது . இதை மீறினால் ஐந்து மடங்கு அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By : Karthiga
பல நகை கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இவ்வாறான முறைகேடுகளை தடுக்க ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்க நகைகளை விற்கும் போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . இது குறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை பிரிவு தலைவர் பவானி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது சட்ட ரீதியான அமைப்பாகும். இது பொருட்களுக்கான தர உரிமம் மேலாண்மை திட்டச்சான்றிதழ், தங்க மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வக சேவைகளின் நலன்,மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாக கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஹால்மார்க்கின் திட்ட நோக்கம் கலப்படத்திற்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் உற்பத்தியாளர்களின் சட்டபூர்வமான தரத்தை பேணுவதை கட்டாயப்படுத்துவது ஆகும்.
தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம். இந்தியாவில் முதற்கட்டமாக 288 மாவட்டங்களில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது பி .ஐ எஸ் தங்கத்தின் தூய்மை , நேர்த்தி மற்றும் ஆறு இலக்க தனித்த அடையாளம் ஆகிய மூன்று அடையாளங்களை கொண்டுள்ளது.
BISCARE எனப்படும் செயலியில் உள்ள VERIFY HUID என்று ஐகானை கிளிக் செய்வதன் மூலம் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளின் நம்பகத்தன்மையை நுகர்வோர் சரி பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை அங்கீகாரம் பெற்ற மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களில் ரூபாய் 200 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நகை கடைகளில் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டும் விற்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.