குழந்தைகளுக்கு தமிழக அரசு கொடுத்த ஊட்டச்சத்து மாவில் மணல் - அதிர்ச்சியில் மக்கள்
கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்க கூடிய சத்து மாவில் மணல் கலந்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்க கூடிய சத்து மாவில் மணல் கலந்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் 75க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் துறையின் சார்பில் மாதம்தோறும் 2 கிலோ அளவு கொண்ட ஊட்டச்சத்து மாவு பாக்கெட் வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று குழந்தைக்கு ஊட்டும்போது ஏதோ வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தனர்.
இந்த ஊட்டச்சத்து மாவைப் பயன்படுத்தி பெற்றோர் குழந்தைகளுக்கு மாவு உருண்டை தயாரித்து கொடுக்கும் போது அதனை குழந்தைகள் சாப்பிட முடியாத அளவிற்கு அதிக அளவு மணல் கலந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அங்கன்வாடி மையத்தில் இருந்து ஊட்டச்சத்து மாவு வாங்கி சென்ற பெற்றோர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து அங்கன்வாடி மைய ஊழியர்களிடம் கேட்டபோது பல அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் கூறியதாவது, 'இந்த மாதம் எங்கள் அங்கன்வாடி மையத்திற்கு வந்த அனைத்து ஊட்டச்சத்து மாவு பாக்கெட்டில் மணல் கலந்திருப்பதாக பெரும்பாலான பெற்றோர்கள் பயன்படுத்திய பிறகு புகார் தெரிவித்தனர். இதுகுறித்து எங்களுடைய உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளோம் ஆகையால் இந்த மாதம் பெற்றோர் வாங்கி சென்ற ஊட்டச்சத்து உணவை பெற்றோர் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதை விட்டு விடுங்கள்' என அங்கன்வாடி ஊழியர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது, 'இதேபோல் மணல் கலந்த ஊட்டச்சத்து உணவை குழந்தைகளுக்கு கொடுத்து அதனால் ஏதும் பாதிப்பு ஏற்படும் என்றால் என்ன செய்வது என்ற பயத்தில் இருக்கிறோம்' என்றார்கள். 'அரசின் அலட்சியத்தால் இந்த மாதிரி கலப்படம் நடைபெறுவதால் கூட்டுறவுத் துறை கூட்டுறவு அங்காடிகளில் கொடுக்கும் பொருளை வாங்கி நம்பி சாப்பிட முடியாத அளவுக்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது' என வேதனையுடன் தெரிவித்தனர்.