இந்தியாவில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பறந்த உத்தரவு : ஆகஸ்ட் 15 முதல் இனி எல்லாம் ஆன்லைன்தான் - மத்திய அரசு கடிதம்
ஆகஸ்ட் 15 - ஆம் தேதி முதல் அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை கட்டாயமாக வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

By : Karthiga
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பல்வேறு வகையான வரிகள் மற்றும் கட்டணங்களை பொதுமக்கள் மின்னணு முறையில் செலுத்தி வருகிறார்கள். ஆனால் ஊராட்சிகளில் பெரும்பாலும் ரொக்கப்பணம் மூலமே வரி மற்றும் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளும் மின்னணுமுறையில் பணம் செலுத்தும் முறையை பயன்படுத்துவது கட்டாயமாகும்.அனைத்து ஊராட்சிகளும் யு.பி.ஐ வசதி கொண்ட ஊராட்சிகளாக அறிவிக்கப்பட வேண்டும். முதல் மந்திரி எம்.பி.,எம்.எல். ஏக்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் யு.பி.ஐ வசதியை தொடங்கி வைக்க வேண்டும்.
யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை அளிக்கும் கூகுள் பே , போன் பே, பே.டி.எம், பீம், மொபிக்விக், whatsapp பே, அமேசான் பே, பாரத் பே போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை மாதம் 30- ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளும் அழைத்து பேச வேண்டும். அவற்றில் தங்களுக்கு பொருத்தமான நிறுவனத்தை ஜூலை 15ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.ஊராட்சி முழுவதிலும் இயங்கும் ஒரே நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
யு.பி.ஐ வசதியை பயன்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட, வட்டளவில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பணம் செலுத்துவதை உரிய முறையில் கண்காணித்து வரவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மின்னணு முறையில் பணம் செலுத்துவது ஊழலை கட்டுப்படுத்த உதவும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் மொரேஷ்வர் பட்டீல் கூறியுள்ளார்.
