'ஆபரேஷன் காவேரி' தான் மிகவும் அபாயகரமான மீட்பு பணி - மத்திய அரசின் துணிச்சலை பாராட்டிய ஜெய்சங்கர்
2014 - ஆம் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் 'ஆபரேஷன் காவேரி' தான் மிகவும் அபாயகரமானது என்று ஜெய்சங்கர் கூறினார்.
By : Karthiga
கர்நாடக மாநில மைசூரில் மோடி அரசின் வெளிுறவு கொள்கை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
சூடானில் உள்நாட்டு போர் மூண்டபோது நான் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். அப்போது பிரதமர் மோடி என்னை தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டார். ஆப்பரேஷன் காவேரி நடவடிக்கை தொடங்கப்பட்டது .ஏறக்குறைய 40,000 இந்தியர்களை மீட்டு அழைத்து வந்துள்ளோம் .அவர்களில் 11 முதல் 12 சதவீதம் பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.
மீட்பு பணிக்கு 17 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. கப்பல்கள் ஐந்து தடவை இயக்கப்பட்டன. இது தவிர 60 முதல் 70 பஸ்கள் வாடகைக்கு அமர்த்தபட்டன .உள்நாட்டு போர் மூண்டவுடன் தலைநகர் கார்தூமில் மற்ற நாடுகளின் தூதரகங்கள் காலி செய்யப்பட்டன . ஆனால் இந்திய தூதரகம் மட்டும் இயங்கியது .காரணம் அங்கு நான்காயிரம் இந்தியர்கள் வசிப்பது தான். இந்தியர்களை மீட்பதற்காக தூதரக பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து பாடுபட்டனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் மிக அபாயகரமான சிக்கலான மீட்பு நடவடிக்கை 'ஆபரேஷன் காவேரிதான்'. இந்தியர்கள் சந்தித்த இக்கட்டான நிலையை வெளியே சொன்னால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி அதை வெளியே சொல்ல மத்திய வெளியுறவு அமைச்சகம் தயங்கியது.
ஒரு தடவை இந்திய விமானப்படை விமானம் மோசமான நிலையில் உள்ள விமான தளத்தில் தரையிறங்கியது. அதற்கு சற்று நேரத்துக்கு முன்பு அங்கு இறங்கிய ஒரு விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது . இருப்பினும் துணிச்சலாக அங்கு இந்திய விமானம் தரையிறக்கப்பட்டது .அதைவிட துணிச்சலாக கீழே தூதரக அதிகாரிகள் இந்தியர்களை பத்திரமாக விமானத்தில் ஏற்றி அனுப்பினார். சூடானில் வேறு பாதுகாப்பு இடத்துக்கு சென்று தங்குமாறு நான் கூறியபோதும் தூதரக அதிகாரிகள் மறுத்துவிட்டனர் .
பஸ்களை வாடகைக்கு பிடித்ததுடன் பெட்ரோலை கள்ள சந்தையில் வாங்க வேண்டி இருந்தது. சோதனை சாவடியில் இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருந்தது .இந்தியர்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு தாக்குதலை சந்தித்து தான் இந்தியா வந்து சேர்ந்தனர். போர் நடக்கும் பகுதியை தவிர்க்க நீண்ட தூரம் சுற்று பயணம் செய்ய வேண்டி இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.