கிரீஸ் நாட்டின் உயரிய விருதையும் தனதாக்கிய பிரதமர் மோடி...!
பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
By : Karthiga
'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி மாநாட்டை முடித்துக் கொண்டு நேற்று கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் சென்றார். அவர் கிரீஸ் நாட்டு அதிபர் கேதரினா சாகெல்லரோபவுலோவை சந்தித்தார். மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' என்ற விருதை அதிபர் கேதரினா வழங்கினார்.
இவ்விருது பிரதமர்களுக்கும் கிரீஸ் நாட்டின் அந்தஸ்தை உயர்த்த பணியாற்றிய பிரபலங்களுக்கும் வழங்கப்படுகிறது. விருதில் உள்ள நட்சத்திரத்தின் முன்பகுதியில் ஏதென்னா என்ற பெண் கடவுளின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, "கிரீஸ் அதிபர் கிரீஸ் அரசு மற்றும் மக்களுக்கு எனது நன்றி. கிரீஸ் மக்கள் இந்தியா மீது வைத்துள்ள மரியாதையை இது காட்டுகிறது". இவ்வாறு அவர் கூறியுள்ளார். விருதுடன் கூடிய பாராட்டு பத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராஜதந்திரியான பிரதமர் மோடி தனது நாட்டை உலக அளவில் உயர்ந்த பாடுபடுகிறார் .துணிச்சலான சீர்திருத்தங்களை அமல்படுத்தி இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளமைக்காக திட்டமிட்டு பணியாற்றுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் கிரீஸ் பிதமர் மிட்சோடா கிசை பிரதமர் மோடி சந்தித்தார். இருவருக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் பிராந்திய சர்வதேச பிரச்சனைகள் குறித்து இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கிரீஸ் இந்திய இருதரப்பு உறவை ராணுவ கூட்டு அளவுக்கு உயர்த்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். சமீப கால பொருளாதார உறவை பாராட்டிய அவர்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்த பாடு பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI