Kathir News
Begin typing your search above and press return to search.

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது - மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்குவதையொட்டி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது - மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
X

KarthigaBy : Karthiga

  |  30 Jan 2023 1:15 PM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார். பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி பிரதமர் மோடி நேற்று மத்திய மந்திரிகள் கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் மத்திய அரசின் கொள்கை முயற்சிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தனர் .இரு அவைகளின் கூட்டு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.


கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி ஜனாதிபதி பதவியேற்று கொண்ட பின்னர் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். முதல் நாளில் பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கை 2022- 23 நிதி ஆண்டிற்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும் , நிதி வளர்ச்சி, பண மேலாண்மை மற்றும் வெளித் துறைகள் உள்ளிட்ட எதிர்கால கண்ணோட்டத்தையும் மதிப்பாய்வு செய்கிறது. மேலும் இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை முக்கிய கொள்கை முடிவுகளுக்கு முன்னோடியாக அமைவது மட்டுமல்லாமல் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் விரிவான புள்ளி விவரத் தரவு மூலம் முந்தைய முடிவுகளின் தாக்கத்தையும் மதிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.


நாளை மறுதினம் காலை 11:00 மணிக்கு மக்களவையில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் 2023 - 24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தொடர்ந்து தாக்கல் செய்கிற ஐந்தாவது பட்ஜெட் இது. அவரது பட்ஜெட் உரை நேரடியாக மக்களவை டிவியில் ஒளிபரப்பாகிறது. பின்னர் மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் வைக்கப்படுகிறது. இந்த பட்ஜெட் காகிதம் இல்லா பட்ஜெட் ஆகவே அமைய உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மக்களை கவருகிற வகையில் இந்த பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட் ஆக அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய வரி விதிப்புகள் இருக்காது . மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வில் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக வருமான வரி விலக்கு வரம்பு ரூபாய் இரண்டரை லட்சம் ஆக இருப்பதை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடுவாரா என்பது நாளை மறுதினம் தெரிந்துவிடும். மேலும் வருமானவரிச் சட்டம் பிரிவு 80-சியின்படி விலக்கு சலுகை என்பது பல வருடங்களாக தொடர்ந்து ₹ 1.5 இலட்சம் ஆகவே உள்ளது. இது ரூபாய் 2 லட்சமாக உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.


மேலும் புதிய வேலைவாய்ப்புகள் முதலீடு சார்ந்த வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் அமையும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. பட்ஜெட் தொடரின் முதல் இரு நாட்களில் மக்களவையிலும் சரி மாநிலங்களவிலும் சரி கேள்வி நேரமும் பூஜ்ஜிய நேரமும் இடம் பெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி இரண்டாம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இரு சபைகளிலும் நடக்கிற விவாதத்தின் முடிவில் பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார் . முதல் அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்குகிறது . ஏப்ரல் ஆறாம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News