நாடாளுமன்ற வரலாற்றில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிய பொன்னான தருணம் - பிரதமர் மோடி!
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம் என்று பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மக்களவை கூடியவுடன் அவை முன்னவர் என்ற முறையில் பிரதமர் மோடி எழுந்து பேச தொடங்கினார். அவர் பேசியதாவது :-
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது ஒரு புனிதமான பணி. இந்த பணியில் தங்கள் பங்களிப்பை செலுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் அவை முன்னவர் என்ற முறையில் முழுமனதுடன் நன்றிய தெரிவித்துக் கொள்கிறேன். மக்களவை ஒப்புதலைத் தொடர்ந்து மாநிலங்கள் அவையிலும் மசோதா நிறைவேறி விடும். இதனால் பெண் சக்தியின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் .அவர்களுக்கு புதிய ஆற்றலை உருவாக்கும். அவர்களிடையே உண்டாகும் நம்பிக்கை கற்பனை செய்ய இயலாத வலிமையாக மாறி இந்தியாவை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்லும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பொன்னான தருணம். இந்த மசோதாவை நிறைவேற்றிய பெருமை ஒவ்வொரு எம்.பி . யையும் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சாரும் இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI