பெண்மைக்கு பெருமை சேர்க்கும் விமானி - சூடானிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் குவியும் பாராட்டுக்கள்
'ஆபரேஷன் காவேரி' நடவடிக்கை மூலம் இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை பெண் விமானி ஒருவர் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
By : Karthiga
உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகள் 'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் நடந்து வருகிறது. சூடானிலிருந்து போர்க்கப்பல்கள் , விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் .பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இதில் முதல் விமானத்தில் நேற்று முன்தினம் 360 பேர் டெல்லி வந்த நிலையில் நேற்று விமான படையின் விமானம் ஒன்றில் 246 பேர் மும்பை வந்தனர்.
விமானப்படையின் இந்த சி -17 குளோப்மாஸ்டர் விமானத்தை ஹர்ராஜ் கவுர் போபராய் என்ற பெண் விமானி இயக்கினார் . விமானப்படையின் நீண்ட போக்குவரத்து விமானமான குளோப்மாஸ்டரை இயக்கும் முதல் ஒரே பெண் விமானி இவராவார். காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திலிருந்து ஜெட்டா சென்ற இந்திய விமானம் அங்கிருந்து 246 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மும்பை வந்து சேர்ந்தது. மும்பை வந்து சேர்ந்த இந்தியர்கள் விமானப்படை விமானி ஹர்ராஜ் கவுர் போபராயை பாராட்டினர்.