ஜி 20 மாநாடு குறித்து மாநில தொழில்துறை மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஜி 20 மாநாடு குறித்து மாநில தொழில்துறை மந்திரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
By : Karthiga
மத்திய அரசு ஜி- 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மாநாட்டிற்காக 32 துறைகள் தொடர்பான விவாதங்களை நாடு தழுவிய அளவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று தொழில்துறையாகும். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான தொழில் துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நேற்று நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த தொழில்துறை மந்திரிகள், தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் காணொளி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் இருந்த படி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு,தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், மற்றும் சில உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனார் .
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. ஜி-20 மாநாட்டில் தொழில்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கினார்.