பிரதமரையே வியக்க வைத்த தமிழனின் கட்டிடக்கலை - கரிகால் சோழன் கட்டிய கல்லணை பற்றி பிரதமர் மோடி பெருமிதம்
பட்ஜெட் கருத்தரங்கில் உள்கட்டமைப்பு பற்றி பேசிய பிரதமர் மோடி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னன் கரிகால சோழன் கட்டிய கல்லணை பற்றி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
By : Karthiga
பிரதமர் மோடி மதிய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து அது தொடர்பான இணையவழி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசி வருகிறார். நேற்றைய கருத்தரங்கில் அவர் உள்கட்டமைப்பும் முதலீடும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்கட்டமைப்பு வளர்ச்சியைத்தான் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக நாங்கள் பார்க்கிறோம். இந்த பாதையை பின்பற்றி தான் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா சிறந்த நாடாக மாறும். தற்போது இந்த வளர்ச்சி வேகத்தை அதிகரித்து உச்சத்தில் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இதில் பிரதம மந்திரி கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான் முக்கிய பங்களிப்பு செய்யும். சாலைகள், ரயில்வே துறைமுகங்கள், விமான நிலையங்கள் என எல்லாவற்றிலும் நவீன உள்கட்டமைப்பை உருவாக்க உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது தொழில்களில் போட்டியை அதிகரிக்கும். சரக்கு போக்குவரத்துக்கான செலவினங்களை குறைக்கும்.
இந்தியாவின் தலைசிறந்த உள்கட்டமைப்புகளை பற்றியும் பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டார். அப்போது அவர் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் மன்னன் கரிகால் சோழனால் முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் உள்ள கல்லணை பற்றி குறிப்பிட்டார்.
இது பற்றி அவர் குறிப்பிடுகையில், தமிழ்நாட்டில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான கல்லணை இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது . அது மக்களுக்கு வளத்தை அளித்து வருகிறது என்று பெருமிதத்துடன் கூறினார். கரிகால சோழன் கட்டிய கல்லணை உலகின் பழமையான அணைகளில் ஒன்று .கற்களையும் களிமண்ணையும் கொண்டு கட்டப்பட்ட கல்லணை 2000 ஆண்டு வரலாறாக கம்பீரமாக இன்றும் காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.