விஷ சாராய விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !
விஷ சாராயம் அருந்தி தமிழ்நாட்டில் 21 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
By : Karthiga
தமிழ்நாட்டில் விஷ சாராயம் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது .தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 21 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் பற்றி ஊடகங்கள் வாயிலாக தகவல் அறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசுக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது. இதில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நிலை, பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ஏதேனும் இருந்தால் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், சோகத்துக்கு காரணமான தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிய விரும்புவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.