தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 52 மாற்றுத்திறனாளிகளுக்கு விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கினார்.
By : Karthiga
சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் விருது வழங்கி கௌரவிக்கிறது. இதன் அடிப்படையில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி டெல்லி விக்யான் பகுதியில் நேற்று நடைபெற்றது. விருதுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரி வீரேந்திரகுமார் , இணை மந்திரிகள் ராமதாஸ் அத்வாலே, பிரதிமா பூமிக் ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த திருமலை குமார், செண்பகவல்லி, இந்து உமா உட்பட நாடு முழுவதும் 52 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் திருமலை குமார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தளவாய் புரத்தை சேர்ந்தவர். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளில் காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய போட்டிகள் உள்ளிட்டவற்றில் பல பதக்கங்களை பெற்றுள்ளார். செண்பகவல்லி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் .இசை ஆசிரியை ஆன இவர் முற்றிலும் பார்வை இல்லாதவர். கடந்த 10 ஆண்டுகளாக இசை வகுப்பு நடத்தி வருகிறார். பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்து உமா செங்கல்பட்டு மேல கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அறிவுசார் மாற்றுத்திறனாளி ஆவார். வேலைவாய்ப்பு திறன் உள்ளிட்ட பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளை பெற்றுள்ளார். கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தன் தாயாருக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு தனி நபர் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.