தமிழருக்கு கிடைத்த பெருமை: சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் - பிரதமர் மோடி வாழ்த்து
சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழர் தர்மன் சண்முகரத்தினம் இவ்வளவு பெரிய வெற்றி எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
By : Karthiga
நகர நாடான சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாகோப்பின் பதவிக்காலம் வருகிற 13-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தமிழருமான தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி பெற்றார் . அவருக்கு 70.4 சதவீத வாக்குகள் கிடைத்தன. வெற்றிக்கு பிறகு நிருபர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசிய தர்மன் சண்முக ரத்னம் நான் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களும் இது அரசியல் தேர்தல் அல்ல என உணர்ந்து அறிவுபூர்வமாக வாக்களித்துள்ளனர்.
என் மீது மட்டும் நம்பிக்கை வைத்து கட்சி சார்பற்ற நபராக என்னை தேர்வு செய்துள்ளனர் . இது மிகவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அதிபர் பதவியை நிறைவு செய்யும் ஹலீமா யாக்கோப்பை சந்தித்து நான் அவரின் அறிவுரையையும் ஆலோசனையும் பெறுவேன் என்றார் .சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியில் மூத்த மந்திரி, துணைப் பிரதமர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை தர்மன் ஷண்முக ரத்னம் வகித்துள்ளார் . அவர் ஆறு ஆண்டு காலத்துக்கு அதிபராக இருப்பார். தர்மன் சண்முக ரத்னத்தின் தந்தை சண்முக ரத்னம் பிரபல மருத்துவ விஞ்ஞானி ஆவார். சிங்கப்பூர் நோயியல் துறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் .தர்மன் சண்முக ரத்தினத்தின் மனைவி ஜேன் யுமிக்கோ இட்டோகி வக்கீல் ஜப்பான் சீனா வம்சாவளியை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு மாயா என்ற மகளும் ,அகிலன் ,அரன் ,அறிவன் என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.
தர்மன் சண்முக ரத்னத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லூங் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் அதிபராக தர்மன் சண்முக ரத்தினத்தை மாபெரும் ஆதரவுடன் சிங்கப்பூர் மக்கள் தேர்வு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் அவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்தியா சிங்கப்பூர் உறவை மேலும் வலுப்படுத்த நான் உங்களிடம் நெருக்கமாக இணைந்து செயல்பட ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
SOURCE :DAILY THANTHI