அரசு வீட்டை காலி செய்தார் ராகுல் காந்தி - இனி யார் வீட்டில் இருப்பார் தெரியுமா?
எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் தான் வசித்து வந்த அரசு வீட்டை ராகுல் காந்தி நேற்று காலி செய்தார்.
By : Karthiga
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாடியபோது 'எல்லா திருடர்களும் மோடி என்ற பொதுப் பெயரை கொண்டிருப்பது எப்படி?' என்று பேசினார். இது பெரும் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது .இதற்கு எதிராக ராகுல் காந்தி மீது குஜராத்தின் சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு கடந்த மாதம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உடனடியாக அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வந்த எண் 12 துக்ளக் லேன் அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வருகிற 22 ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி அரசு இல்லத்தை விட்டு விரைவில் வெளியேறுவேன் என கூறியிருந்தார். அத்துடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தான் வசித்து வந்த எண் 12 துக்ளக் லேன் வீட்டை காலி செய்தார். அவரது பொருட்கள் அனைத்தும் இரண்டு மினி லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் அந்த பொருள்கள் அனைத்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தனது தாயுமான சோனியாவின் எண் 10 ஜன்பத் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதன் மூலம் ராகுல் காந்தி தனது தாய் நிலத்தில் குடியேறுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சூர த் கோர்ட் தனக்கு வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி மேல் முறையீடு செய்துள்ளார் . சூரத் செசசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்டது. இதில் வருகிற 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.