முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்த திமுக அரசு - ஓ.பி.எஸ் கண்டனம்
முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்ததால் தி.மு.க அரசை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்
By : Karthiga
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகளில் ஒரு லட்சத்து 82,000 முதியோருக்கான ஓய்வூதியத்தை தி.மு.க அரசு ரத்து செய்துள்ளதாக வந்துள்ள செய்தி ஏழை, எளிய வருவாய் இல்லாத முதியவர்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. விடுதலின்றி பயன்பெறுவது என்பதற்கு பதிலாக இருப்பவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்ற பரிதாபகரமான நிலை தான் தற்போது நிலவுகிறது. அரசின் செலவினத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில நிபந்தனைகளை விதித்து அதன் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்தால் அது இயற்கை நீதிக்கு புறம்பானது.
ஓய்வூதியம் கொடுக்கப்படுவதால் தான் முதியோர்களை அவர்களது பிள்ளைகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நிலையில் முதியோர் பெறும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் எல்லாம் அனாதை இல்லங்களை நோக்கி செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும். இந்த மக்கள் விரோதம் மாடல் என்பதைத்தான் 'திராவிட மாடல்' என்று தி.மு.க சொல்கிறது போலும் வயதான ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.