ரயில்வே விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம்: தீ விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்
கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தியது தான் மதுரை ரயில் தீ விபத்துக்கு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
By : Karthiga
மதுரையில் தீ விபத்து குறித்த தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகைக்கு எடுக்கப்பட்ட தனியார் ரயில் பெட்டியில் 26 ஆம் தேதி அதிகாலை 5 .15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அறிந்த உடனேயே தகவல் அறிந்த தீயணைப்பு துறை விரைந்து வந்து 7 மணியளவில் தீயை அணைத்தனர். மற்ற ரயில் பெட்டிகளுக்கு தீ பரவாமல் முழுமையாக தீயணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஒன்பது பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். இந்த வாடகை ரயில் பெட்டியை உத்தரபிரதேச மாநிலம் சிதாபூரைச் சேர்ந்த பாஷின் என்ற ட்ராவல்ஸ் நிறுவனம் புக் செய்துள்ளது.
இந்த வாடகை ரயில் பெட்டி கடந்த 17ஆம் தேதி லக்னோவில் இருந்து புறப்பட்டது ரயில் பெட்டி 63 பயணிகளுடன் 26 ஆம் தேதி அதிகாலை 3. 47 மணிக்கு மதுரை வந்தடைந்தது. பிறகு வாடகை பெட்டி மட்டும் தனியாக பிரித்து ரயில் நிலைய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பயணிகளில் சிலர் 'தேநீர்' தயார் செய்வதற்காக விதியை மீறி மறைமுகமாக ரயில் பெட்டியில் எடுத்து வந்திருந்துள்ள சிலிண்டரை பற்ற வைத்துள்ளனர் .அப்போது இந்த தீ விபத்து நடந்துள்ளது.
தீ பரவத் தொடங்கியதும் பெரும்பாலான பயணிகள் ரயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி விட்டனர். இந்த தீ விபத்தில் எட்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். தீவிர காயம் அடைந்தவர்களுக்கு தலா ₹2 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய். 50,000 நிவாரணமும் நிதி வழங்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
SOURCE :DAILY THANTHI