இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட்டுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி - என்ன ஆனார் தெரியுமா?
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுக்கு உளவு சொன்ன மூத்த விஞ்ஞானியை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
By : Karthiga
மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் மூத்த விஞ்ஞானியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் இந்திய ராணுவ ரகசியங்களை செல்போன் மூலம் மர்ம நபரிடம் பகிர்ந்து வருவதாக டி .ஆர். டி .ஓ சார்பில் மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது .போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .அப்போது விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானை சேர்ந்த உளவாளிகளுக்கு கசிய விட்டது தெரியவந்தது.
இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் ரகசியங்கள் எதிரி நாட்டுக்கு தெரிந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை தெரிந்தும் விஞ்ஞானி அவரது பதவியை தவறாக பயன்படுத்தி இராணுவ ரகசியங்களை எதிரி நாட்டுக்கு கொடுத்துள்ளார் என்றார். இதற்கிடையே விஞ்ஞானி பிரதீப் குரருல்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது .
அவர் பாகிஸ்தான் உளவாளிகளின் பெண் ஏஜென்ட் வலையில் சிக்கியதும் அவரிடம் தான் ரகசிய தகவல்களை பகிர்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விஞ்ஞானியை அந்தப் பெண் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அன்று முதல் அவர் அந்தப் பெண்ணிடம் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்திய பாதுகாப்பு ரகசியங்களை வாட்ஸ் ஆப்கால் , வீடியோ கால் , வாய்ஸ் மெசேஜ் மூலம் தெரிவித்துள்ளார் .
இவர் டி.ஆர்.டி.ஓ புனே மையத்தின் இயக்குனராக பதவி வகித்து வந்ததும் உளவு விவகாரம் வெளியானதை தொடர்ந்து அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. போலீசார் கைதான விஞ்ஞானியிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர் என்னென்ன தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு கொடுத்துள்ளார் என ஆய்வு செய்து வருகின்றனர் .
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு வழங்க விஞ்ஞானி பிரதீப் குருல்கருக்கு ஆபாச வீடியோ கால் மூலம் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது . மேலும் பணப்பலன் எதுவும் பெற்றாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர் . பாகிஸ்தான் உளவாளிகளுக்கு இந்திய பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை வெளியிட்ட மூத்த விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.