இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம்!
அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலியாக இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 28-ஆம் தேதி முதல் கால வரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
By : Karthiga
இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் தொடர்பான முரண்பாடுகளை களையக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஏற்கனவே போராட்டம் அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இடைநிலை பதிவு ஆசிரியர்கள் இயக்கத்தினரை சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் நேற்று அழைத்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொருளாளர் கண்ணன் அளித்த பேட்டி வருமாறு:-
2009-ஆம் ஆண்டுக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய வேறுபாடு ஏற்பட்டது. அந்த ஊதியத்தை சரி செய்ய கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆட்சி அமைப்பதற்கு முன்பு எங்கள் கோரிக்கைகளை கேட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி தி.மு.க தேர்தல் வாக்குறுதிகள் 311 வாக்குறுதியாக சம வேலைக்கு சம ஊதியம் எங்கள் கோரிக்கை சேர்க்கப்பட்டது. இதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். என்று கோரிக்கை வைத்தோம்.
அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் அதற்கான ஊதியக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஒன்பது மாதங்கள் ஆகியும் முடிவு இயற்றப்படவில்லை. இதனால் 20000 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் இயக்கத்தின் சார்பில் முதல் பருவ விடுமுறை காலத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் கால வரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்தோம். இந்த போராட்டத்திற்கான அறிவிப்பை அரசுக்கு 40 நாட்களுக்கு முன்பாக தெரிவித்தோம். எனவே பள்ளிக்கல்வியின் முதன்மை செயலாளர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
25-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அரசு காலம் தாழ்த்துவது போல தெரிகிறது . எனவே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. இதை தொடர்ந்து சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 28-ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தயாராகிவிட்டனர். அரசு குழு அமைத்தும் காலதாமதம் ஏன் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI